×

கெஜ்ரிவால் டெல்லி மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்.. குற்றம் செய்வதை வழக்கமாக கொண்டவரல்ல : உச்சநீதிமன்றம்

டெல்லி : மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் தருவது பற்றி உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தனது கைது நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்க இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதங்கள் பின்வருமாறு..

நீதிபதிகள் : கெஜ்ரிவால் டெல்லி மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்; தற்போது அங்கு தேர்தல் நடக்கிறது. அவர் பிரசாரம் செய்ய வேண்டியுள்ளது. தற்போது அங்கு அசாதாரணமான சூழ்நிலை; கெஜ்ரிவால் குற்றம் செய்வதை வழக்கமாக கொண்டவரல்ல.

அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா : கெஜ்ரிவால் முதலமைச்சர் என்பதால் வழக்கில் இருந்து விலகி செல்லக்கக்கூடாது. தேர்தல் பிரசாரம் செய்வது அவ்வளவு அவசியமா?

நீதிபதிகள் : 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுகிறது; அரசு தலைமை வழக்கறிஞர் கூறுவதை ஏற்க முடியாது. குற்ற செயல்களில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளை தனி விதமாக நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் கூறவில்லை.

அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா : கெஜ்ரிவாலுக்கு ஜாமின் தரவேண்டுமா வேண்டாமா என்பதுதான் கேள்வி!!

நீதிபதிகள் : 1 மணிக்குள் வாதங்களை முடிப்பீர்களா?

அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா : இன்றைய தினமே இ.டி. தரப்பு வாதங்களை முடித்துவிடுவோம் என்று உத்தரவாதம் கொடுக்க முடியாது. கெஜ்ரிவால் அமலாக்கத்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் அவரை கைது செய்திருக்க மாட்டோம். அனைத்து தரப்பினரும் சமம் தான். கெஜ்ரிவால் வாதங்களை முன்வைக்க 3 நாட்கள் அனுமதி தந்ததால், இ.டி. தரப்பு வாதங்களையும் முன்வைக்க அனுமதி தரவேண்டும்.

நீதிபதிகள் : தேர்தலுக்கு முன்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக வாதிடுவதற்கு கெஜ்ரிவால் தரப்புக்கு உரிமை உள்ளது. 2 நாட்கள் தான் கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர்கள் வாதங்களை முன்வைத்தனர்.

கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி : தவறான கருத்தை உருவாக்க துஷார் மேத்தா முயற்சி செய்கிறார். நிபந்தனைகளின் அடிப்படையில் இடைக்கால ஜாமின் வழங்கப்படுவது வழக்கம்தான். முதல்வரின் கையெழுத்து இல்லை என்று கூறி, துணை நிலை ஆளுநர் அரசு கோப்பை திருப்பி அனுப்பி விட்டார்.

வாதங்கள் தொடர்ந்து வரும் நிலையில், கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

The post கெஜ்ரிவால் டெல்லி மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்.. குற்றம் செய்வதை வழக்கமாக கொண்டவரல்ல : உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,Chief Minister ,Delhi ,Supreme Court ,Arvind Kejriwal ,Enforcement Department ,Dikhar ,
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...